``ஊழல் சாம்ராஜ்யமாக கோவில்கள்.. கிருஷ்ணசாமி காட்டம்!

கோவில்கள் குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், ``தமிழகத்தில் உள்ள பெரிய கோவில் நிலங்கள் எல்லாம் இன்று கொள்ளை கூடாரங்களாக மாற்றப்பட்டுள்ளது. அவை தடுக்கப்பட வேண்டும். கோவில் சொத்துகளில் இருந்து வரும் வருமானம் மக்களுக்கு தான் சென்றடைய வேண்டும். கோவில்களை அனைத்து விதமான பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். நிலங்கள் மீட்கப்பட வேண்டும். அதுகுறித்து வருவாய் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகள் எப்படி பெரும் பணக்காரர் ஆகின்றனர். ஊழல் சாம்ராஜியமாக கோவில்கள் மாற்றப்பட்டுள்ளது, ஊழலின் தோற்றுவாயே கோவிலில் இருந்து தான் துவங்குகிறார்கள். கோவில்களை முழுமையாக பாதுக்காக்க என்ன நடவடிக்கை தேவை என்பதை ஆய்வு செய்ய வேண்டும், இந்து அறநிலையதுறையில் என்னென்ன விஷயங்கள் நடந்துள்ள என்பது குறித்து ஒரு மாத காலத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்து 850 கோவில்களுக்கு, 5.75 லட்சம் ஹெக்டேர் பரப்புள்ள நிலங்கள், 2.5 கோடி சதுரடி பரப்பு வணிக கட்டடங்கள் உள்ளன. பலரது ஆக்கிரமிப்பால், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய்தான் வருமானம் வருவதாக கூறப்படுகிறது. முறையாக வருமானம் வரப்பெற்றால், மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டை எவ்வித வரியுமின்றி போட முடியும்.

உதாரணமாக, கோவை பேரூர் கோவிலுக்கு, 2,500 ஏக்கர் நிலம் உள்ளது. இது யாரிடம் உள்ளது. என்ன வருமானம் வருகிறது என தெரியாது. இதுபோல் உள்ள அனைத்து கோவில்களின் அசையும், அசையா சொத்துக்களை மீட்க வேண்டும்.அதன் முழு விபரங்களையும், வருமானத்துடன் அரசு வெள்ளை அறிக்கையாக, ஒரு மாதத்துக்குள் வெளியிட வேண்டும். இல்லையெனில், நான் கோர்ட்டிற்கு செல்வேன். மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என்று கூறியிருக்கிறார்.

More News >>