தமிழகத்தில் அமலானது புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்குடன் பதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரத்தைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.

இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் இயங்கவும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

More News >>