லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்

சென்னை கோடம்பாக்கத்தில் லோன் கொடுக்க மறுத்ததால், இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியரை கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இயங்கி வரும் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பால் ஜோசப் என்பவர் டீம் லீடராக பணியாற்றி வருகிறார்.

இந்த இன்சூரன்ஸ் கம்பெனியில் கீழ்பாக்கத்தை சேர்ந்த கிரிதரன் மற்றும் அயனாவரம் பகுதியை சேரந்த சுவேதா ஆகிய இருவரும், தலா 52 ஆயிரம் வீதம் பாலிசி எடுத்துள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே, கிரிதரன், சுவேதா ஆகிய இருவரும் பாலிசி எடுத்த நிலையில் தங்களுக்கு லோன் கொடுக்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர்.

இதற்கு நிறுவன ஊழியர் பால்ஜோசப் குறைந்தபட்சம் 6 மாதம் பாலிசி தொகை செலுத்தினால் மட்டுமே கடன் தொகை தரமுடியும் எனவும், ஆகையால் தற்பொழுது உங்களுக்கு லோன் தர இயலாது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள், தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர்.நிர்வாகம் தரப்பில், 1 வருடம் முடிந்த பின்னரே பாலிசி தொகை திருப்பி தரப்படும் என் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர்கள், அலுவலகத்திற்கு சென்று பால் ஜோசப்பை கத்தி முனையில் காரில் கடத்தி சென்றனர்.

இதையடுத்து, இன்சூரன்ஸ் உரிமையாளர் பிரனவ்வை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவர்கள், தங்கள் பாலிசி தொகையை திருப்பி தந்தால் மட்டுமே பால்ஜோசப்பை விடுவிக்க முடியும் என மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இன்சூரன்ஸ் உரிமையாளர் பிரனவ், அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்துள்ளார்.

பணத்தை கொடுத்த பின்பும், பால் ஜோசப் திரும்பாததால் பதற்றமடைந்த பிரனவ், கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே, கடத்தப்பட்ட பால் ஜோசப்பை கடத்தல்காரர்கள் தேனாம்பேட்டை அருகே விட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோடம்பாக்கம் காவல்துறையினர், கிரிதரன், சுவேதா உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.

More News >>