மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி

IPL கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

IPL தொடரின் 17-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குயிண்டன் டி காட் 3 ரன்களிலும், இஷான் கிஷண் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா, சூரியகுமார் யாதவ் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் ரோஹித் சர்மா 63 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் விளாச, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இதனால் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது.

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் மாயங் அகர்வால் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல், கெயில் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.இதனால் பஞ்சாப் அணி 17.4வது ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

கே.எல்.ராகுல் 60 ரன்களும், கெயில் 43 ரன்களும் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் மும்பை அணி நடப்பு தொடரில் 3வது தோல்வி அடைந்துள்ளது.

More News >>