ஜார்ஜியாவிலிருந்து வந்ததும் விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய விஜய் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!

மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு, நடிகர் விஜய் இன்று காலை நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழன், குஷி, யூத், பத்ரி, பிரியமானவள், நேருக்கு நேர், திருமலை என ஏராளமான படங்களில் விஜய் - விவேக் கூட்டணி நகைச்சுவையில் கலக்கியுள்ளனர். கடைசியாக விஜய்யுடன் விவேக் பிகில் படத்தில் நடித்திருந்தார். இதனிடையே கடந்த 17ம் தேதி யாரும் எதிர்பார்க்காத நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார். அவரது இழப்பு தமிழ் சினிமா உலகத்திற்கு பேரிழப்பாக அமைந்தது. கொரோனா இரண்டாம் அலை இருந்த நேரத்திலும் பலரும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆனால், அஜித் மற்றும் விஜய் இரு பிரபலங்களும் விவேக் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்காதது விவாதத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இரு தரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டனர். விஜய் அஞ்சலி செலுத்த வராததற்கு காரணம், விவேக் மறைவிற்கு முன்பாகவே, நடிகர் விஜய் விஜய் 65 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பிற்காக கடந்த 6 ஆம் தேதி இரவு ஜார்ஜியா சென்றிருந்தார். தொடர்ச்சியாக 16 நாட்கள் படப்பிடிப்பில் இருந்ததால் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை.

படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் விவேக் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று விஜய் படப்பிடிப்பு முடிந்து ஜார்ஜியாவிலிருந்து தமிழகம் வந்தடைந்தார். அவர் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும் புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று காலை நடிகர் விவேக் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

More News >>