சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் இல்லை: தேர்தல் ஆணையம்

கர்நாடக மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடையாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே மாதம் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெறும் நோக்கத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெற்றி முனைப்போடு அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, கோலார், தங்க வயல், ஹனூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுவதாக அதிமுக சமீபத்தில் அறிவித்தது. இதில், போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிட தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு அதிமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மட்டுமே அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி. கர்நாடகா மாநிலத்தில் அக்கட்சி அங்கீகரிக்கப்படவில்லை. அதனால், அதிமுக கட்சிக்கு இரட்டை இலை சின்னம் வழங்க முடியாது ” என கூறி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>