மகாநதி நடிகையின் 100 கோடி பட்ஜெட் திரைப்படம்.. கொரோனாவால் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..

கொரோனா பரவல் காரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சுமார் 100 கோடி மதிப்பிலான திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படம் தயாராகி உள்ளது.

ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்தை வருகிற மே 13-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>