மேற்கு வங்கம்: மீண்டும் ஆட்சியமைக்கும் மம்தா

மேற்கு வங்காளத்தில் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியமைப்பதற்கான சாத்திய கூறுகள் தென்பட ஆரம்பித்துள்ளன. கோவிட்-19 கிருமி பரவும் சூழ்நிலையிலும் சூடான தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது. 8 கட்டமாக மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய நிலவரப்படி மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் 204 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதாவும் மேற்கு வங்காளத்தில் முன்னேற ஆரம்பித்தது. இந்த சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் கடும் போட்டி நிலவியது. முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராமம் தொகுதியில் பின்தங்கியுள்ளார். ஆனால் மாநிலம் முழுவதுமான நிலையில் அவரது கட்சி ஆட்சியமைக்க தேவையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா 81க்கும் மேலான இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை தக்கவைக்கும் நிலையை அடைந்துள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட் 88க்கும் மேலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆகவே, அங்கும் ஆட்சி மாற்றம் இல்லை.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 132க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆகவே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய நிலை தென்படுகிறது.

More News >>