“30 ஆண்டு அதிமுக கோட்டையை இடித்த நிர்வாகிகள்” – சங்கரன்கோவில் சதி வேலை…!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகள் சட்டப்பேரவை தேர்தலில் எந்த தொகுதியில் அதிமுக தோற்றாலும், சங்கரன்கோவில் தனித் தொகுதியில் மட்டும் அதிமுக கட்டாயம் வெற்றி பெறும். கடந்த 1996 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பர்கூரில் தோற்ற போதும் கூட, தமிழகத்தின் நான்கு தொகுதிகளில் அதிமுக வென்ற போதும் கூட, அவற்றில் ஒரு தொகுதியாக சங்கரன்கோவில் தனித் தொகுதி இருந்தது.

அந்த அளவுக்கு அதிமுக-வின் கோட்டையாக சங்கரன்கோவில் தொகுதி இருந்தது. ஆனால், இந்த முறை சங்கரன்கோவில் தனித்தொகுதியில் திமுக தனது கோடியை ஏற்றியுள்ளது. 11,297 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்துள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் ராஜலெட்சுமிதான், இந்த முறையும் போட்டியிட்டார். 2,52,939 வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் 71 சதவிகித வாக்குகள் பதிவாகின. தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராஜா, 71,347 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அமைச்சர் ராஜலெட்சுமி 60,050 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

சங்கரன்கோவில் தனித்தொகுதியில் அதிமுக தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக பல கூறப்படுகின்றன. தொகுதிக்கு அமைச்சர், அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காததுதான் காரணம் என்றும், வன்னியர்களுக்க மட்டும் அதிமுக அரசு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே அமமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை, 22,682 வாக்குகளைப் பெற்றதும், குறிப்பிட்ட சமூகத்தினர் அமமுகவிற்கு வாக்களித்ததே ராஜலெட்சுமியின் தோல்விக்குக் காரணம் எனகூறப்படுகிறது.

முக்கிய காரணமாக இந்த முறையும் தேர்தலில் போட்டியிட ராஜலெட்சுமிக்கு அதிமுக வாய்ப்பு கொடுத்ததால், வாய்ப்பு பறிபோன நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் செய்த சூழ்ச்சியே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

தென்மாவட்டத்தில் 30 ஆண்டுகள் அதிமுக கோட்டையாக இருந்த சங்கரன்கோவில் தனித்தொகுதியில் அதிமுக தோல்வியை தழுவியது, அக்கட்சியின் பின்னடைவில் இதுவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

More News >>