சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

87 வயதான டிராஃபிக் ராமசாமி, சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்தார். இதையடுத்து போக்குவரத்துக் காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அது முதல் டிராஃபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்டார். சில காலம் ஊர் காவல் படையிலும் பணியாற்றிய இவர், ஆர்டிஐ போன்ற விஷயங்கள் பெரிய அளவில் அறியப்படாத அந்த காலத்திலேயே அதற்கான விழிப்புணர்வைக் கொண்டுவருவதில் முன்னோடியாகச் செயல்பட்டவர். உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடுத்து அதற்கு தீர்வு கண்டவர். இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிளக்ஸ் பேனர் கலாச்சாரத்துக்கு எதிரான அவரது தொடர் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் கட்-அவுட் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சென்னையில் வரம்பு மீறிக் கட்டப்படும் கட்டிடங்கள், வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாக உயர் நீதிமன்றம் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் டிராஃபிக் ராமசாமி சமீபகாலமாக பெரிய அளவில் உடல் நலனில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. அதனால் அலுவலகத்திலிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்ததால் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நிலை மோசமான நிலையில் இருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்தார்.

More News >>