ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது என்பது இனப்படுகொலைக்கு சற்றும் குறைவானதல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது.

மீரட் மருத்துவக் கல்லூரியின் ஐசியு-வில் 5 நோயாளிகள் மரணமடைந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது. அதே போல் லக்னோ கோமதி நகர் சன் மருத்துவமனை மற்றும் பிற தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் கொரோனா நோயாளிகளையே புறக்கணிக்கும் போக்குகளும் சமூக ஊடகங்களில் பரவலானதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் இனப்படுகொலை என்று வர்ணித்து கண்டித்துள்ளது.

நீதிபதிகள் சித்தார்த் வர்மா, அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு கொரோனா பரவல் மற்றும் கோவிட்-19 குவாரண்டைன் மையங்கள் நிலவரம் குறித்த பொதுநல வழக்கில் விசாரணை நடத்தினர். அப்போது நீதிபதிகள் கூறியது, “ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாடுகளினால் மருத்துவமனைகளில் நோயாளிகள் இறப்பது எங்களுக்கு வலியை தருகின்றது, இது குற்றச்செயல், இனப்படுகொலைக்கு சற்றும் குறைந்ததல்ல.நாம் எப்படி நம் மக்களை இப்படி சாக விடலாம். அதுவும் விஞ்ஞானம் இவ்வளவு முன்னேற்றம் அடைந்த நிலையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சையெல்லாம் வெற்றிகரமாக நடைபெறும் போது இதில் நாம் இப்படி அசட்டையாக இருக்கலாமா?பொதுவாக சமூக வலைத்தளங்களில் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் குறித்து வரும் விமர்சனங்களைக் கொண்டு நாங்கள் எங்கள் உத்தரவுகளைப் பிறப்பிப்பதில்லை. ஆனால் இந்த பொதுநல வழக்கின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் இத்தகைய சமூக ஊடக செய்திகளின் உண்மைத் தன்மையை நம்புகின்றனர்.உடனடியாக இதற்கு தீர்வு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடுகிறோம்.ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் குறித்து லக்னோ, மீரட் நிர்வாகம் உடனடியாக விசாரிக்க வேண்டும். அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். லக்னோ, மீரட் மேஜிஸ்ட்ரேட்கள் அடுத்த விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

More News >>