கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி

கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளதால் இயக்குநர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா இரண்டாமல் அலை தீவிரம் காட்டி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு புதிய கட்டுபாடுகள் தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், இயக்குநர் வசந்தபாலன் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். 2002-ல் வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய வெயில், அங்காடித்தெரு, காவியத் தலைவன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் இயக்கிய வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜெயில். ஜி.வி.பிரகாஷ், அபர்னதி நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தை இயக்கி வருவதுடன், அப்படத்தை தனது பள்ளி பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “அன்புள்ள நண்பர்களுக்கு. நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயல முடியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்” என குறிப்பிட்டுள்ளார். பலரும் விரைவில் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

More News >>