முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்

நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தொடர்ந்து செம்பருத்தி டீ குடித்து வருபதாகவும், அதனால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதாகவும் கூறியிருந்தார். சர்க்கரை நோய், பிரஷ்ஷர் போன்றவற்றுக்கு செம்பருத்தி டீ நல்லது என்றும் தன்னை பின் தொடர்பவர்களும் செம்பருத்தி டீ குடிக்கும்படியும் அறிவுறுத்தியிருந்தார். நயன்தாராவின் இந்த பதிவுக்கு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நயன்தாராவின் பதிவை கண்டித்து டாக்டர். பிலிப்ஸ் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், செம்பருத்தி டீ குடிப்பதால் ஆண் மற்றும் பெண்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், செம்பருத்தி டீயின் மகத்துவம் பற்றி பேசி தனது அறிவின்மையை நயன்தாரா காட்டியுள்ளார் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தை பின்பற்றுகிறேன் என்கிற வகையில், போலியான தகவல்களை நயன்தாரா பரப்பி வருகிறார் என்றும் டாக்டர் பிலிப்ஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். செம்பருத்தி டீயின் மருத்துவ குணங்கள் அனைத்தும் நிரூபிக்கப்படாத உண்மைகள் என்றும் டாக்டர் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து செம்பருத்தி டீ பற்றிய பதிவை நீக்கியுள்ளார். இதற்கிடையே, நயன்தாரா வெளியிட்ட மற்றொரு பதிவில் முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் தரத்துக்கு தன்னை இறக்கி விடுவார்கள் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

More News >>