பொன்முடி சுய சிந்தனையுடன்தான் பேசியுள்ளார்- நெல்லையில் காளியம்மாள் காட்டம்
மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் இன்று வண்ணார்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் வியனரசு தலைமை தாங்கினார். இதில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் பங்கேற்றார். அவர் கூறுகையில், 'என் நிலத்தில் இருந்து ஒரு பிடி மண் கூட எடுக்க முடியாது என்ற சினிமா டயலாக்குகளை கேட்டு இருப்பீர்கள். நிலம் மக்களின் உணர்வுகளோடு கலந்தது. அந்த வகையில் கச்சத்தீவு தமிழர்களுக்கானது. அது இலங்கை வசம் சென்றதும் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் கடல் பகுதியையும் அந்த நாடு அபகரித்து விட்டது.
இந்த கச்சத்தீவை மீட்க இதுவரை பேச்சுவார்த் நடந்ததா? எனப்பார்த்தால் 15, 20 ஆண்டுகளுக்கு முன் 4 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பிறகு தேர்தல் நேரங்களில் மட்டும் பேசி அரசியல் நாடகமாடி வருகிறார்கள். இவ்வளவு பெரிய தீவு கட்சத்தீவைப் பற்றி வெளிப்படையாக பேச ஆட்கள் இல்லை. கடலோடி மக்களுக்காக பேச நாதி இல்லை. இந்தியாவில் இவ்வளவு பெரிய ராணுவம் உள்ளது. ஆனாலும், தமிழக கடல் எல்லையில் ஆயிரக்கணக்கான மக்களை பலி கொடுக்கிறது. இந்த பிரச்னையை தடுக்க ஆளுகின்ற எந்த கட்சியும் முயற்சி எடுக்கவில்லை. தேர்தல் வருகிறது என்ற உடன் ஆளாளுக்கு மீனவர்கள் பிரச்னை பற்றி பேசுகிறார்கள்.
தமிழக மீனவர்களின் படகுகளை கடலில் மூழ்கடிக்கலாம் என இலங்கையில் விவாதிக்கிறார்கள். படகு என்பது மீனவர்கள் ஒவ்வொருவரின் உயிர். மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்களின் பெயர்கள் மாறுகிறதே தவிர வேறு ஒன்றும் மாறவில்லை.மத்திய அரசிடம் எங்களிடம் பணம் இல்லை கொடுங்கள் என கெஞ்சவில்லை. நியாயமாக எங்களுக்கு சேர வேண்டிய தொகையை கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். பொன்முடி சுயசிந்தனையுடன் பேசி உள்ளார். மேடையில் இப்படி பேசலாமா ? என கேட்டுக்கொண்டேதான் பேசி இருக்கிறார். இப்படிப்பட்ட ஆட்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.' என்றார்