தேசப்பற்று ஒன்றே நம் இலக்கு - வீரவநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சி முழக்கம்
நாட்டில் போர் மேகம் சூழ்ந்துள்ள சூழலில், களத்தில் நிற்கும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைவர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் வீரவநல்லூரில் உணர்வுப்பூர்வமான கூட்டம் நடைபெற்றது. வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள், தங்களது செல்போன் ஒளிரச் செய்து ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தளர். இந்திய ராணுவத்திற்கு துணை நிற்போம்" என்றும், "தேசப்பற்று ஒன்றே நம் இலக்கு" என்றும் முழக்கமிட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மஜகவின் இந்த செயல்பாடு தேசப்பற்றை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. ராணுவ வீரர்களின் மன உறுதியை வலுப்படுத்தும் விதமாக, ஒட்டுமொத்த வீரவநல்லூர் மக்களும் ஒன்று திரண்டு ஆதரவுக் கரம் நீட்டினர்.
மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேசுகையில், "தேசத்தின் பாதுகாப்பிற்காக உயிரையும் பணயம் வைத்து நிற்கும் ராணுவ வீரர்களுக்கு நமது ஆதரவை தெரிவிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை. இந்த ஒளிவிளக்கு போராட்டம், தேசத்தின் மீதான நமது பற்றையும், ராணுவ வீரர்களுக்கான நமது நன்றியையும் வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்துள்ளது" என்றார்.