எஸ்.வி.சேகரை கைது செய்யாதது வியப்பளிக்கிறது - கனிமொழி

எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னும், காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது என்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டினார். இது தொடர்பாக வீக் வார இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார். காவல்துறையிலும் புகார் அளித்தார்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் இழிவான கருத்துகளை வெளியிட்டார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் சங்கங்களும் நடிகர் எஸ்.வி.சேகருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்த போதும் அவர் பார்வேர்டு செய்த தகவல் மிகவும் கடுமையானது. எனவே தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் பத்திரிகையாளர்கள் காவல்துறையில் புகார் செய்தனர்.

சென்னை மற்றும் மதுரை, கோவை ஆணையர் அலுவலகத்திலும் பத்திரிகைகயாளர்கள் மற்றும் மாதர் சங்கத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கைஒத்தி வைத்த நீதிபதிகள் காவல்துறைக்கு கைது செய்வதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கனிமொழி, “பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட பி.ஜே.பி. உறுப்பினர் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னும், காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.

இழிவாக ஒரு பதிவு செய்துவிட்டு, பின்னர் அதை நீக்குவதும், வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமாகி வருகிறது. விமர்சனம் செய்ய அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் அவதூறு செய்ய அல்ல. காவல்துறை இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>