பெண் கொலை: மாந்திரீகத்திற்கு பேஸ்புக்கில் உதவி கேட்டதால் வந்த வினை
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவருடைய மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கயல்விழி மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு கடந்த 8 மாதங்களாக தேடிய நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்த சாமியாரான சிவசாமி என்பவர் கயல்விழியை காரில் அழைத்துச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது அவர் கயல்விழியின் 7 பவுன் நகைக்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சேரன்மகாதேவி 80 அடி அகல கால்வாயில் வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கால்வாயில் இருந்து கயல்விழியின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
முதுகலை பட்டதாரியான கயல்விழிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணமாகியது. தொடர்ந்து 2 ஆண்டுகளில் அதாவது 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கணவர் அவரை பிரிந்துவிட்டார். மீண்டும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கயல்விழி பல கோவில்களுக்கு சென்று வேண்டி வந்தார்.
இந்நிலையில் அவர் தனது பேஸ்புக்கில் தனது கணவரை சேர்த்து வைக்க நல்ல மாந்திரீகம் செய்ய தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கீறீர்களா என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இதனை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாயாண்டி ராஜா பார்த்துள்ளார். அதனை தொடர்ந்து முதலில் கயல்விழியை காதல் கண்ணோட்டத்தில் மாயாண்டி ராஜா நெருங்கி உள்ளார். ஆனால் கயல்விழி அதற்கு உடன்படவில்லை. இதனால் அவரிடம் மாந்திரீகம் செய்யும் தனது மாமா சிவசாமியிடம் அழைத்துச்சென்று பணத்தை பறிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கயல்விழியை மீண்டும் கணவருடன் சேர்த்து வாழ வைப்பதாக கூறி நம்பவைத்து பல்வேறு தவணைகளாக கயல்விழியிடம் மொத்தம் ரூ.5 லட்சம் வரையிலும் சிவசாமி, மாயாண்டிராஜா ஆகியோர் பறித்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்கள் ஏமாற்றுவதை அறிந்த கயல்விழி தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி கயல்விழியை சுசீந்திரத்துக்கு வரவழைத்து சிவசாமியும், அவருடைய சகோதரி மகனான மாயாண்டி ராஜா, வீரவநல்லூரை ேசர்ந்த கண்ணன், சிவனேஸ்வரி ஆகிய 4 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை எடுத்து கொண்டு கயல்விழி உடலை காரில் எடுத்துச்சென்று சேரன்மாதேவி அருகே கங்கணாகுளம் அருகே மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் உடலை வீசிவிட்டு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்ற விபரம் தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து சிவனேஸ்வரியை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும், மற்ற 3 பேரையும் பாளை மத்தியச்சிறையிலும் அடைத்தனர்.