5000 பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனு : விஷால் கவர்னரிடம் தாக்கல்

ஐந்தாயிரம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித்திடம் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் தாக்கல் செய்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ் திரையுலகினர் கடந்த மாதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மவுன போராட்டம் நடத்தியது. இதில், ரஜினி, கமல் உள்பட திரையுலகத்தை சேர்ந்த பெரும்பாலானோர் கலந்துக் கொண்டனர். போராட்டம் முடிவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்கள், தொழிலாளர்கள் என சுமார் 5 ஆயரிம் பேர் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர்.

அந்த கோரிக்கை மனுவை தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால், நடிகர்கள் சங்க தலைவர் நாசர், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் அளித்தனர்.

இதுதொடர்பாக, நாசர் பேசும்போது: காவிரி பிரச்னைக்காகவும் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாகவும் திரைத்துறையினர் கையெழுத்திட்ட மனுவை கவர்னரிடம் அளித்தோம். காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>