எட்டையபுரம் அருகே விபத்து உடன்குடி கவுன்சிலர் பலி

துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி நடுக்கடை தெருவை சேர்ந்தவர் அசோகன் என்பவரின் மனைவி அன்புராணி (வயது 55) துாத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, - எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார்.அதோடு, உடன்குடி டவுன் பஞ்சாயத்தின் 8வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்தார்.

அன்புராணிக்கு உடல்நிலை பாதிப்பு எற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நேற்று, காரில் மதுரைக்கு சென்றார். அவரது மகன் நேரு, காரை ஓட்டினார். மருமகள் இந்துவும் காரில் இருந்துள்ளார். எட்டையபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

காரின் முன்பக்கம் அப்பளம்போல நொறுங்கியதால், முன் இருக்கையில் அமர்ந்திருந்த அன்புராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காரை ஓட்டிய நேரு அவரின் மனைவி இந்து லேசான காயமடைந்தனர். மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

More News >>