சினிமா தொடர்- `கண்டதும்hellip கேட்டதும்hellip பகுதி 3

`A Few Hours of Spring’ (2012)- பிரஞ்சு

`தன்னம்பிக்கை’ ஊட்டும் புத்தகங்கள்தான் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில் அதிகம் விற்பனையாகின்றன. இன்னும் எவ்வளவு இயந்திரங்கள் வந்தாலும் `இன்னர் பீஸ்’ என்ற சொல்லப்படும் மன அமைதிக்கு, அது வித்திடாது. இப்படி தொழில்நுட்பத்தாலும் இயந்திரமய உலகத்தாலும் தீர்க்க முடியாத சில விஷயங்களில் உறவுச் சிக்கலும் ஒன்று. உண்மையில், நம் சமகால உறவுச் சிக்கலை மேலும் மேலும் சிக்கலாக்கியதில் தொழில்நுட்பங்களுக்கு பெரும் பங்கு உண்டு. விந்தையிலும் விந்தை, பெரும்பான்மை சினிமாக்கள் இதை சித்தரிக்கத் தவறியுள்ளன.  

பிரஞ்சு மொழியில் 2012-ம் ஆண்டு வெளிவந்தத் திரைப்படம் `A Few Hours of Spring’ (Quelques heures de printemps). புத்தாயிரத்தில் உலக அளவிலான கிளாசிக் சினிமா வரிசையில் இந்தத் திரைப்படம் இணைய வாய்ப்புள்ளது. காரணம், படத்தின் களம். 40-களில் இருக்கும் ஒரு மகனுக்கும் அவரது வயதான தாய்க்கும் இடையில் நடக்கும் உறவுச் சிக்கலை, மிக நேர்த்தியான திரை மொழியுடன் சொல்லியுள்ளது இப்படைப்பு.

சிறையில் பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்துவிட்டு, வெளியே வரும் அலெய்ன் (Vincent Lindon), அவரது தாய் வெட்டேவுடன் (Helene Vincent) வாழும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார். சிறைவாசம் அனுபவித்த மகன் மேல் பாசமிருந்தும் கணிவு காட்ட முடியாமல் தவிக்கிறார் வெட்டே. வீட்டில் எழும் சின்னச் சின்ன பிரச்னைக்கும் அலெய்னை கடிந்துகொள்கிறார் வெட்டே. பல்லாண்டுகால சிறை வாழ்க்கை அலெய்னுக்கு அன்பின் வாசத்தை மறக்கடிக்கிறது.

தாய்க்கும் மகனுக்கும் பிரச்னை அதிகரிக்கிறது. கூடவே இடைவெளியும். ஒரே வீட்டில் இருந்தும் வெவ்வேறு அறைகளில் தனியாக அமர்ந்து உன்னும் அளவுக்கு இருவருக்கும் இடையில் சச்சரவு முற்றுகிறது. ஒரு நாள் இரவில் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க, வீட்டைவிட்டு வெளியேறுகிறார் அலெய்ன். வெட்டே தனிமையில் வாடுகிறார். கூடவே, வெகு நாளாக அவதியுற்றுவரும் ப்ரெய்ன் டியூமர் நோயினாலும் பீடிக்கப்படுகிறார். உறவுச் சிக்கல் தொடர, தன் இறப்பு குறித்து ஒரு முக்கிய முடிவை வெட்டே எடுக்கிறார். கடைசி காலத்தில் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுவதால், மகனை மறுபடியும் வீட்டுக்கு `ப்ளான் போட்டு’ வரவழைக்கிறார். தாய்க்கும் மகனுக்கும் இடையேயான விரிசலை உருக்கமான க்ளைமாக்ஸ் மூலம் ஒட்டவைத்து கரையவைத்துள்ளார் இயக்குநர் ஸ்டெஃபேன் பிரிசே (Stéphane Brizé).

திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை, ஸ்டெடி ஷாட்ஸ், சாந்தமான இசை, நீளமான காட்சிகள் ஆகியவற்றின் ஊடாகவே நகர்கிறது. பெரும்பான்மையான உலக சினிமாக்கள் போல, ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆமை வேகத்தில் நகர்கிறது கதை. ஆனால், அது நம்மை துருத்தவில்லை. காரணம், கதை அப்படியொரு அமைதியைப் பொறுமையைக் கோருகிறது. அதுவும் க்ளைமாக்ஸில், வைக்கப்படும் `2-ஷாட்’, கச்சிதம்… கேமரா இருப்பது கிட்டத்தட்ட மறக்கடிக்கப்படுகிறது. அலெய்னும் வெட்டவும் முதல் முறையாக ஆறத்தழுவி கட்டி அணைத்து பரஸ்பரம், `ஐ லவ் யூ’, `ஐ லவ் யூ டூ’ என்று சொல்லும்போது, அநாயாசமாக கண்ணீர் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அந்தக் காட்ச்சிக்குப் பிறகு அடுத்த சீனுக்கு எந்த அவசியமும் இல்லை என்பதால், ஃபேட்-அவுட்டாகி டைட்டில் கார்ட் திரையை நிரப்புகிறது. கூடவே, நிசப்தமான நம் கண்ணீரும்.

ஒரு முன்னாள் கைதியான அலெய்னுக்கு தாயிடம் மட்டுமல்ல, தன் முன்னால் காதலியிடம், தன் நண்பர்களிடம் என எல்லோரிடமும் பிரச்னைதான். ஷேவ் பண்ணாத தாடியுடனும், எப்போதும் கலைந்திருக்கும் சிகையுடனும் தோன்றும் அலெய்னின் நடிப்பு அற்புதம். ஒரு இடத்தில்கூட அவர் படத்தில் சிரிப்பதில்லை என்பது, எவ்வளவு பெரிய மனச்சிக்கலுக்கு கைதிகள் உள்ளாகிறார்கள் என்பதை நமக்குப் புரியவைக்கிறது. கணவன் இறந்துவிட்டார், மகன் சிறையில் இருக்கிறான், இப்போது, ஒரு வயதான பெண் தன்னந்தனியாக வாழ வேண்டும். அவள், துணிந்து அந்த முடிவை எடுக்கவில்லை. அந்த முடிவு திணிக்கப்படுகிறது. இதனால், அவளும் ஏகப்பட்ட மனச்சிக்கலுக்கு உள்ளாகிறார். ப்ரெய்ன் டியூமரால் உடல் அளவிலும் நொடிந்து போகிறாள். இப்படிப்பட்ட ஒரு தடிமனான கேர்க்டரை துள்ளியமாக திரையில் பிரதிபலிக்கிறார் வெட்டேவாக நடித்திருக்கும் Hélène Vincent. ஒரு முழுமையான உலக சினிமாவுக்கு `A Few Hours of Spring’ சிறந்த உதாரணம்.

`பசி வந்தால் பத்தும் பறக்கும்’ என்பர். அப்படியென்றால், இறப்பு வந்தால்..? நம்மில் பெரும்பாலானோருக்கு, நாம் இறக்கப் போகும் நேரம் எப்போது எனபதெல்லாம் தெரியாது. காலையில் தேனீர் குடிப்பது போல இறப்பும் நமது வாழ்க்கையில் கடந்து செல்கிறது. ஆனால், இறப்பைவிட உடல் உபாதைகளால் சிரமப்படும் சூழல் சாவதை விடக் கொடுமையானது. மறுபடியும் நான் முதலில் ஆரம்பித்த இடத்துக்கே வருகிறேன். இறப்பு வந்தால்..? அதுவும் அடுத்த ஐந்து நிமிடத்தில் நீங்கள் இறக்கப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டால். இந்தக் குறுகிய வாழ்வில் நாம் சேர்த்து வைத்த வஞ்சம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு என எல்லா அழுக்குகளும் கரைந்தோடி எதிரே இருக்கும் நபரை ஆரத் தழுவி அழத் தோன்றாதா?

இதைப் போன்றொரு சம்பவம் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு நடக்காதுதான். ஆனால், அப்படி ஒரு விஷயம் நடந்தால் எப்படி இருக்கும் என்ற உணர்வு `A Few Hours of Spring’ என்ற உன்னதப் படைப்பு உங்களுக்குத் தரும் என்பது திம்மம்.

 

-பரத்ராஜ்.ர

More News >>