தவெக மீனவர்களுக்கு மானியம் கிடையாது... கொந்தளிக்கும்திருநெல்வேலி மாவட்ட தவெக

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள கூட்டப்புளி கிராமத்தில், த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்கொடி வண்ணம் பூசப்பட்ட 10 மீனவர்களின் படகுகளுக்கு அரசு மானியம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு நெல்லை மாவட்ட த.வெ.க கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கூட்டப்புளியை சேர்ந்த சந்தியா, சூசை, சூடி, பெலிக்கான், திபூர்சியான், தீபன், தீபகு ரூஸ், டெலஸ், ரூபன் மற்றும் அஜித் ஆகிய 10 மீனவர்கள் தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள்.இதனால், தங்கள் படகுகளுக்கு தமிழக வெற்றிக்காக கட்சி கொடியில் வண்ணம் பூசியிருந்தனர். தமிழக வெற்றிக் கழகக் கொடி வண்ணத்தில் இருந்ததால், இந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு இந்த மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய மானியமான 250 லிட்டர் மண்ணெண்ணெய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மீனவர்கள் துறை அலுவலகத்தில் முறையிட்டபோது, "குறிப்பிட்ட கட்சி கொடியின் வண்ணத்தில் படகுகள் உள்ளன. பெயின்டை மாற்றி அடியுங்கள். மாற்றவில்லையென்றால் மானியம் கிடையாது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கடற்கரைப் பகுதிகளில் உள்ள த.வெ.க. கட்சியைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு தெரிவித்து திருநெல்வேலி மாவட்ட தவெக மருத்துவ பிரிவு செயலாளர் டாக்டர் கிறிஸ்டோபர் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருநெல்வேலி தெற்கு மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியைகுட்பட்ட, கூட்டப்புளி பகுதி மீனவர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மீன்வளத்துறை இயக்குனர் ராஜதுரை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகளில் தமிழக வெற்றி கழக பெயருடன் கொடியின் வண்ணத்தை பூசியதால் மானியம் தரமாட்டோம் என்று மிரட்டி வருகின்றனர்.

பிற கட்சிகளின் கொடி வண்ணத்தில் பல படகுகள் உள்ளன. ஆனால், தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியின் வண்ணம் பூசிய படகுகளுக்கு மட்டும் தடை விதிககப்படுவதை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் . அரசாங்கம் என்பது மக்களுக்கு பொதுவானது. அரசு அதிகாரிகள் கட்சி பாகுபாடு பார்ப்பது கண்டனத்துக்குரியது. பதவியை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக , இந்த பிரச்னைக்குதீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தவெக தொண்டர்களின் மனங்களில் உள்ளது...

இதுகுறித்து மேலும், பல தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறுகையில், "பல வண்ணங்களில் படகுகள் இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர்களை மட்டும் நீக்கச் சொல்வது பாரபட்சமானது. படகுகளின் உள்ள பெயர்களை வேண்டுமானால் நீக்கலாம். ஆனால், மீனவர்களின் மனங்களில் உள்ள கழகத்தின் பெயரை யாராலும் நீக்க முடியாது. அரசு இது போன்ற நிபந்தனைகளை விதித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடாது. மானிய மண்ணெண்ணெய் வழங்குவது அரசின் கடமை. அதை அரசியல் உள்நோக்கத்துடன் மறுப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற்று, மீனவர்களுக்கு உரிய மண்ணெண்ணெயை வழங்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் மீனவர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News >>