கவின் படுகொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி பணி இடைநீக்கம்! சுர்ஜித்தை இன்று காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்!
திருநெல்வேலி, ஜூலை 30: நெல்லையில் தகவல் தொழில்நுட்ப பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித்தை இன்று காலை திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க தீவிர திட்டமிட்டுள்ளனர். இந்த பரபரப்பான கொலை வழக்கில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, சுர்ஜித்தின் பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொலைச் சம்பவம் மற்றும் பின்னணி:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தெற்குமாட வீதியைச் சேர்ந்த சந்திரசேகர் - தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் கவின் (வயது 27). இவர் சென்னையில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 27-ஆம் தேதி, விடுமுறைக்காக ஊருக்கு வந்த கவின், தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
அப்போது அங்கு வந்த சாஜித் என்ற சுர்ஜித், கவினைப் பேசுவதற்காக அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இது தொடர்பாகப் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித்தை கைது செய்து விசாரித்தனர். தனது அக்காளும் கவினும் பழகி வந்ததாகவும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழகுவதை நிறுத்துமாறு கவினிடம் கூறியதாகவும், ஆனால் அவர் கேட்காததால் வெட்டிக் கொலை செய்ததாகவும் சுர்ஜித் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
செல்போன் பாஸ்வேர்ட், சஸ்பென்ஷன், மற்றும் விசாரணை:
நேற்றைய விசாரணையில், கொலையான கவினின் சகோதரர் பிரவீன், கவினின் செல்போன் பாஸ்வேர்ட் மறந்துவிட்டதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட கவினின் செல்போனை ஆராய்ந்தால்தான் முழு உண்மைகளும் தெரியவரும் என்று காவல்துறையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில், சுர்ஜித்திடம் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியிடம் தொடரும் விசாரணை:
முன்னதாக, சுர்ஜித்தின் தந்தையான ராஜபாளையம் பட்டாலியனில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அவரது தாயார் மணிமுத்தாறு பட்டாலியனில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் நேற்று பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டனர். இந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியினரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையிலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறவினர்களின் தொடர் போராட்டம்:
கவின் கொலை செய்யப்பட்டதில் இருந்து அவரது உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் கவினின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவரது உறவினர்கள் முகதானிரவுண்டானா விலக்க சாலைமறியல் போராட்டம் நடத்தினர். சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினர். இதனால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கவினின் உடலை வாங்க நேற்று மூன்றாவது நாளாகவும் உறவினர்கள், குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
புதிய ஆதாரங்களும் கோரிக்கைகளும்:
இந்த நிலையில், கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகளான ஏரல் தாசில்தார் செல்வக்குமார், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆறுமுகமங்கலத்திற்குச் சென்றனர். கவினின் குடும்பத்தினரிடம் அரசு சார்பில் இழப்பீடு தொகையைக் கொடுத்தனர். ஆனால் அதையும் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். போலீஸ் தம்பதியை கைது செய்ய வேண்டும், அதுவரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்த உறவினர்கள், மேலும் கவினும், அந்தப் பெண்ணும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அப்போது, கவினின் உறவினர் ஒருவர் கையில் பாட்டிலில் பெட்ரோலுடன் வந்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அதைப் பறிமுதல் செய்து அவர் மீது தண்ணீர் ஊற்றினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கவினின் தந்தை சந்திரசேகரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
காவல்துறை பேச்சுவார்த்தை தோல்வி:
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, கவினின் தம்பி பிரவீன், உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவினர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. பின்னர் வெளியே வந்த கவினின் உறவினர்கள், "போலீஸ் விசாரணையில் எங்களுக்குத் திருப்தி இல்லை, போலீஸ் தம்பதியைக் கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்துச் சென்றனர்.
கவின் கொலை வழக்கில் காவல்துறை விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சுர்ஜித்திடம் இன்று மேற்கொள்ளப்படும் விசாரணை வழக்குக்கு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறிப்போன கவின் செல்போன்:
கொலையாவதற்கு முன்பாக கவின் யார் யாரிடம் எல்லாம் பேசினார் என்ன நடந்தது என்பது கவினின் செல்போனை ஓபன் செய்தால் மட்டுமே தெரிய வரும் என்பதால் அதீத பரபரப்பு இந்த வழக்கில் ஏற்பட்டுள்ளது.