அதிமுக கூட்டத்தில் த.வெ.க கொடி பறந்தது ஏன்? - நெல்லையில் நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?
தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் இணையும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது,
*தவெக கொடி அதிமுக கூட்டத்தில் பறந்தது ஏன்?
சமீபத்தில் அதிமுக கூட்டத்தில் தமிழக வெற்றி கழக (தவெக) கொடி பறந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். முதலில் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள், பிறகு மக்கள் ஒன்றிணைவார்கள். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஒரே அணியில் திரளப் போகிறார்கள்," என்றார். தவெக கொடி பாஜக கூட்டத்தில் எப்போது பறக்கும் என்ற கேள்விக்கு, தற்போது அதற்கு பதிலளிக்க இயலாது என புன்னகையுடன் பதிலளித்தார். அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்ததும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது என கூறியதும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
*கரூர் சம்பவம் மற்றும் விஜய்-ன் பாதுகாப்பு*
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்காதது குறித்த கேள்விக்கு, "விஜய்-ன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரியுள்ளார்," என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
*திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள்*
திமுக தலைமையிலான கூட்டணி மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாக நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடினார். அது குறித்து கூறுகையில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சொத்து வரி மற்றும் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை," என்றார். மேலும், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும், தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கேங்மேன், ஆசிரியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாகவும், இந்த "விடியாத அரசு" 2026 தேர்தலில் மக்களிடம் தகுந்த பதிலைப் பெறும் . நீட் தேர்வு மூலம் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு கிடைப்பதாகவும், மேலப்பாளையத்தில் 10 பேருக்கு இடம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு அவர் கூறினார்.