அலட்சியமாக சிகிச்சை : கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் அபராதம்

அலட்சியமாக சிகிச்சையளித்த டாக்டர் மற்றும் மருத்துவமனை இணைந்து நோயாளிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடாக வழங்க நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு முருகன் என்ற முகமது அப்துல்லா வயிற்றுவலி காரணமாக கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர் ரமேஷ் என்பவர் அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்தார். ஆனாலும், வயிற்று வலி குணமாகவில்லை.

இதையடுத்து, முருகன் என்ற முகமது அப்துல்லா மற்றும் அவரின் மனைவி ஷகிலா பாகு ஆகியோர் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது , குடல்வால் அழற்சிக்காக மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், பின்னர் கண்டறியப்பட்ட புற்றுநோய்க்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் டாக்டர் மற்றும் மருத்துவமனை தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட கூடுதல் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், முகமது அப்துல்லா மற்றும் ஷகிலா பானுவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக டாக்டர் ரமேஷ் மற்றும் ஆர்த்தி மருத்துவமனை இணைந்து ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. வழக்குச் செலவு 10 ஆயிரம் தனியாக வழங்க வேண்டும் . 45 நாட்களுக்குள் இந்தத் தொகையை செலுத்தத் தவறினால், ஆண்டுக்கு 9% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

More News >>