ரீல்ஸ் மோகம் : தூத்துக்குடியில் சரக்கு ரயிலில் ஏறி வீடியோ எடுத்த இளைஞர் துடி துடித்து சாவு 

தூத்துக்குடியில் சரக்கு ரயில் மீது ஏறி ரீல்ஸ் எடுத்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் நீதியரசன் என்பவரின் மகன் அருண் (18), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர்கள் ராஜகோபால் நகர் 4வது தெருவை சேர்ந்த  கவின் (14)  ஹரிஷ் (17 ) ஆகிய 3 பேரும் நேற்று  மாலை மீளவிட்டான் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் வண்டியில் ஏறி ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தனர். 

அப்போது,  மேலே சென்ற மின்சார வயரில் கைப்பட்டதில் மின்சாரம் தாக்கி அருண்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். மேலும் கவின், ஹரிஷ் ஆகியோருக்கு  காயம் ஏற்பட்டது. உடனடியாக 3 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் 2பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரீல்ஸ் மோகத்துக்கு இளைஞர் உயிரை பறிகொடுத்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

More News >>