நெல்லை அரசு மருத்துவமனையில் அரிய சாதனை: நிமோனியா பாதித்த குழந்தை காப்பாற்றிய மருத்துவர்கள்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நிமோனியாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து இன்று (நவ.20) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

நெல்லை கேடிசி நகரில் வசித்து வரும் கார்த்திக் என்பவரின் இளைய மகள், ஒன்றரை வயதான ஶ்ரீநிகா, தொடர்ச்சியான இருமல், சளி, காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக கடந்த நவம்பர் 1 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. குழந்தைக்கு சிறப்பு ஆக்ஸிஜன் கருவி (CPAP/High Flow Oxygen) மூலம் ஆக்ஸிஜனும், உரிய நோய் எதிர்ப்பு மருந்துகளும் செலுத்தப்பட்டது. தொடர்ச்சியான சிகிச்சையிலும், குழந்தைக்கு மூச்சுத்திணறலும், காய்ச்சலும் குறையவில்லை. மேலும், பரிசோதனையில் குழந்தையின் இடதுபக்க நுரையீரல் சுருங்கி, அதன் இடைவெளியில் காற்று சேர்ந்திருப்பது (Pneumothorax) கண்டறியப்பட்டது.

குழந்தையின் அபாயகரமான நிலையைக் கருத்தில் கொண்டு, பல்வேறு துறைகளின் நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, 20 நாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் பயனாக, குழந்தை ஶ்ரீநிகா நிமோனியா மற்றும் நுரையீரல் பாதிப்பிலிருந்து மீண்டு, தற்போது நலமுடன் இருக்கிறார்.

இதில், சோகம் என்னவென்றால, கார்த்திக்கின் மூத்த மகள் ஏற்கனவே நிமோனியா பாதிப்பால் உயிரிழந்ததுதான். தற்போது, இரண்டாவது குழந்தைக்கும் நிமோனியா பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் உறுதியுடன் செயல்பட்டு குழந்தையை காப்பாற்றி விட்டனர்.இதையடுத்து, குழந்தை இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

குழந்தை ஶ்ரீநிகாவிற்கு சிறப்பான சிகிச்சையை வழங்கிய குழந்தைகள் சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மருத்துவர்கள் பாபு கந்தகுமார், வெங்கட்ராமன், பூங்கொடி மற்றும் சிகிச்சைக்கு உதவிய செவிலியர்கள் குழுவினரை நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரேவதி பாலன் மனதாரப் பாராட்டினார்.

More News >>