ஸ்ரீவைகுண்டம் பெண் கூட்டு பலாத்காரம் தவெக நிர்வாகிகள் கைது

ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவரது, நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் அருகேயுள்ள ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து, அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போதுதான் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ததுடன் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி எம்பி கனிமொழி இந்த சம்பவம் தொடர்பாக , “பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. தேர்தல் காலத்தைப் போல தி.மு.க மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள்தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து பொறுப்புடன் முதல்வர் விஜய் அவர்கள் செயல்படப் போவது எப்போது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

More News >>