கல்வீச்சில் பலியான திருமணி குடும்பத்துக்கு 3 லட்சம் நிவாரணம்

காஷ்மீர் கல்வீச்சில் சென்னை ஆவடியைச் சேர்ந்த திருமணி செல்வம் (வயது 22) என்பவர் தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் குடும்பத்துடன் காஷ்மீர் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு குல்மார்க்கில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி ஒரு வாகனத்தில் சென்றபோது கலவரக்காரர்கள் வாகனத்தின் மீது கற்களை வீசியதில் திருமணியின் தலையில் காயம் எற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்  உமர் அப்துல்லா, “சென்னையில் இருந்து வந்த இளைஞர் எனது தொகுதியில் இறந்திருக்கிறார். இதற்காக நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த குண்டர்களையும், அவர்களது செயல்கள், கொள்கைகளையும் ஆதரிக்கமாட்டேன்” என்று கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவடியை சேர்ந்த திருமணி செல்வம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் செய்தியை தெரிவித்தார். அதையடுத்து, குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிருந்து ரூபாய் 3 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் இருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் விமானம் மூலம் திருமணி உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.

திருமணி செல்வம் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற 71 பேரும் ஸ்ரீநகரில் உள்ள தனியார் விடுதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் மே10-ஆம் தேதி தமிழகம் வருவார்கள் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துயுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>