குழந்தை கடத்தல் கும்பல் என்று நினைத்து மூதாட்டி கொலை:20 பேர் கைது

கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தல் கும்பல் என்று நினைத்து பொது மக்கள் சரமாரியாக அடித்து தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் 20 பேரை கைது செய்தனர்.

சென்னை, பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் மோகன் குமார்(43), சந்திரசேகர் (37). இருவரும், மலேசியாவில் வசித்து வருகின்றனர். இந்தியாவிற்கு திரும்பிய இவர்கள் குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது அருகே உள்ள அத்திமூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, உடன் வந்த ருக்மணி(65) என்ற மூதாட்டி அங்கிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் கொடுத்தார்.

இதைக் கண்ட அக்கிராம மக்கள், குழந்தையை கடத்த முயல்வதாக நினைத்து ருக்மணி மற்றும் உடன் வந்த 4 பேரையும் சரமாரியாக அடித்து ஆடைகளை கிழித்தெறிந்து கடுமையாக தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த ருக்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ருக்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மூதாட்டியை அடித்து கொலை செய்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தின்போது எடுத்த வீடியோ காட்சிகளை கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் அதிரடி கைது நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் ஊரைவிட்டு காலி செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>