பார்வையையும், கையையும்தான் இழந்தேன் நம்பிக்கையை அல்ல! - ராமேஸ்வரம் மீனவர்

ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி கண்பார்வை மற்றும் கையை இழந்த நிலையிலும், மனம் தளராமல் செயல்படுகிறார். அவரின் வாழ்க்கை, அனைவருக்கும் உத்வேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

பார்வை நன்றாகத் தெரிபவர்களுக்கும், ஆபத்தான கடலில் மீன் பிடிப்பது கடினமாக காரியம். அதுவும் கண் பார்வை இல்லையென்றால் நினைப்பதற்கே கடினமாக உள்ளது. ஆனால், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முனியசாமி என்ற மீனவர், கண்பார்வை மற்றும் கையை இழந்த நிலையிலும், கடலில் எதிர்நீச்சல் அடிக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு முன்னர், தந்தையுடன் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார் முனியசாமி, அப்போது கடலில் மிதந்து வந்த பொருளை எடுத்து ஆர்வத்துடன் திறந்து பார்த்துள்ளார். அதிலிருந்த பொருள் வெடித்ததில் தனது கண் பார்வையையும், கையையும் இழந்துவிட்டார்.

உடல் ஊனமான மீனவர் முனியசாமிக்கு, உறவினர்கள் பெண் தர மறுத்துள்ளனர். அவமானங்களை புறந்தள்ளிய அவர், கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அவரை பார்த்து வியப்படைந்த சக மீனவர்கள் தற்போது முனியசாமிக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

இந்நிலையில், முனியசாமியின் விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் பார்த்து வியந்த ஒருவர் தனது பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது முனியசாமிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மீன்பிடி தொழிலுக்கு சென்று மனைவி, 3 பிள்ளைகளை மகிழ்சியுடன் காப்பாற்றி வருகிறார்.

உடல் ஊனத்தை பொருட்படுத்தாமல், தன்நம்பிக்கையுடன் செயல்படும் மீனவர் முனியசாமி அனைவருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.

More News >>