முதல்வராகப் போறீங்களா ஓ.பி.எஸ்?- பற்றவைக்கும் ப.சிதம்பரம்!

கர்நாடக தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்ட ட்வீட்டுக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் ப.சிதம்பரம்.

கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.

இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 222 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன. அதே நேரத்தில், `நாங்கள் தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது.

பாஜக-வால் நியமிக்கப்பட்ட கவர்னர், எதிர்பார்த்தது போலவே எடியூரப்பாவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். எடியூரப்பா, இன்னும் 2 வாரங்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பெரும்பான்மைக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்படுகின்றனர் என்பதால், பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடும் என்று பரவலாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கதை இப்படி சென்று கொண்டிருக்க, நேற்று 2 மணி வரை கர்நாடகத்தில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்ற நிலையே இருந்தது. இதை நம்பி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், `கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று தென்னிந்திய அரசியலில் பிரமாண்ட நுழைவை மேற்கொள்ளும் பாஜக-வுக்கு வாழ்த்துகள்’ என்று தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

இதையொட்டி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், `கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை "தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்? இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா? இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>