கர்நாடகா தேர்தல் எதிரொலி- பெட்ரோல் விலை சுமார் 5 ரூபாய் உயருமாம்

கர்நாடகா தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 5 ரூபாய் வரையில் உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது.

பெட்ரோலியப் பொருள்களின் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து பலவாறு கண்டனக் குரல்கள் எழுந்தாலும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்வதாக இல்லை.

தினமும் காலை 6 மணிக்கு அந்த நாளுக்கு உரிய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், கர்நாடக மாநில பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடப்பதற்கு முந்தைய பத்து நாள்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

பத்து நாள்களும் ஒரே விலையில் விற்றதை அடுத்து பெட்ரோலிய நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சம்பாதித்துள்ளதாம். இதனால், அடுத்த விலை ஏற்றமாக பெட்ரோல் லிட்டருக்கு 4.6 ரூபாய் உயர்த்தப்பட வேண்டும். அதாவது. சரியாக 6.2 சதவிகித விலை உயர்வு என்றும் கூறப்படுகிறது.

மேலும் டீசல் விலை லிட்டருக்கு 3.8 ரூபாய் அதாவது 5.8 சதவிகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>