தமிழக விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது-வருத்தப்படும் குமாரசாமி

கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள மஜத தலைவர் குமாரசாமி, தமிழக விவசாயிகளின் நிலை குறித்து பேசியுள்ளார்.

கடந்த 15-ம் தேதி கர்நாடக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. பாஜக-வுக்கு பெரும்பான்மை இல்லாத போதும், ஆளுநர் அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நேற்று வாக்கெடுக்குப்புக்கு முன்னரே பதவி விலகினார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இதையடுத்து, காங்கிரஸ்-மஜத கூட்டணியின் சட்டமன்றத் தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்த அரசியல் கேலிக்கூத்து நிறைவடைந்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் குமாரசாமி. அப்போது அவர், `பாஜக செய்த கேலிக் கூத்தைத்தான நாடே பார்த்து சிரித்ததே. இனி அது குறித்து கருத்து கூற ஒன்றுமில்லை.

நாளை நான் பதவியேற்க உள்ளேன். என் கவனம் முழுவதும், 5 ஆண்டுகளுக்கும் நிலையான ஸ்திரமான அரசை கர்நாடக மக்களுக்குக் கொடுப்பதுதான். நாளை பதவியேற்ற பின்னர் டெல்லிக்குப் புறப்படுகிறேன்.

அங்கு ராகுல் மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்து அமைச்சர்களை தேர்வு செய்வது குறித்து விவாதிப்பேன். உண்மையில் தமிழக விவசாயிகளின் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது. இந்த வருடம் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>