டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு

பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி அன்று கடையடைப்பு வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கு.பால்பாண்டியன் தலைமையில் நேற்று போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இதில், பொது செயலாளர் கு.பழனிபாரதி, கோதண்டம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் சங்க மாநில தலைவர் எஸ்.தினகரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து, கு.பால்பாண்டியன் கூறுகையில், “டாஸ்மாக்கில் 16 ஆண்டுகளாக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. இது தங்களுக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது. இதனால், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாலை 3 மணிக்கு கடையடைப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>