தூத்துக்குடி இளைஞர்களின் நிலை.. நீதிபதிகள் அதிர்ச்சி! (வீடியோ)

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 95 இளைஞர்களை சட்டவிரோத காவலில் வைத்து போலீசார் சித்ரவதை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, 126 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன், பலர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.

சந்திரசேகர் என்ற வழக்குறைஞர், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாளிடம் ஓர் மனுவைக் கொடுத்தார். அதில், சட்டவிரோத காவல் பற்றி விசாரணை நடத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்த மனுவை ஏற்ற மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் “வல்லநாடு துப்பாக்கி பயிற்சி சரகத்தில், சட்டவிரோத காவலில் யாராவது வைக்கப்பட்டுள்ளார்களா? என்பதை நேரில் சென்று விசாரிக்குமாறு விளாத்திகுளம் மாஜிஸ்திரேட்டு காளிமுத்துவேலுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட்டு காளிமுத்துவேல், நேரில் சென்று ஆய்வு நடத்தினார், அங்கு 95 இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அங்கிருந்த காவல்துறையினரிடம் விசாரித்தபோது, அனைவரும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதால் பலர் ரத்தக்காயத்துடனும் வலியுடனும் இருந்தது தெரியவந்தது.

அந்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்புங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதனால், வேறு வழியின்றி காவல்துறையினர் 65 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் மற்ற 30 பேரை விடுவித்தனர்.

பின்னர், வழக்கு போடப்பட்ட 65 பேரும் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்புமாறு அவர் உத்தரவிட்டார். இந்நிலையில், 65 பேரின் ஜாமீன் மனுக்களையும் இரவு முழுவதும் அமர்ந்து விசாரிக்குமாறு மாவட்ட நீதிபதி சாருஹாசினிக்கு மதுரை நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டார்.

அதனை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனுக்களை விசாரித்து 65 பேரையும் விடுதலை செய்தார். மேற்கொண்டு யாராவது ஜாமீன் மனு போடக்கூடும் என்று எதிர்பார்த்து, அவர் நள்ளிரவுவரை நீதிமன்றத்திலேயே அமர்ந்திருந்தார். ஆனால், வேறு யாரும் ஜாமீன் மனு போட வரவில்லை என்று அறிந்த பின்னர், இரவு 11 மணிக்குமேல் அவர் புறப்பட்டுச் சென்றார்.

காவல்துயையினரின் இந்த சித்ரவதை சம்பவம் பற்றி மாஜிஸ்திரேட்டு அண்ணாமலையிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>