ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திடீர் தீ விபத்து: பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கநாதர் கோவிலில் உள்ள வசந்த உற்சவ மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருச்சியில் பிரசிதிப்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினமும், மாலையில் வசந்த உற்சவ மண்டபம் வழியாக ஆஸ்தான மண்டபத்துக்கு நம்பெருமாள் சென்று சேவைப்புரிவார். இதற்காக உற்சவ மண்டபம் மற்றும் ஆஸ்தான மண்டபம் இடையே 10 அடி நீளம், 6 அடி அகலத்தில் பந்தல் அமைத்து வெட்டிவேர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ஆஸ்தான மண்டபத்திற்கு வசந்த உற்சவ மண்டபம் வழியாக புறப்பட்டார்.

அப்போது, நம்பெருமாள் சுவாமிக்கு முன்னால் சென்ற தீவார்த்திகள் கொண்டு சென்ற தீவட்டியில் இருந்து எதிர்பாராதவிதமாக வெட்டிவேரில் தீ பட்டது. இதனால், தீப்பொறி கிளம்பி தீ எரிய தொடங்கியது. அதற்குள் சுதாரித்துக்கொண்ட கோவில் பணியாளர்கள் தீயை அணைத்து கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.

சமயபுரம் கோவில் யானை மிதித்து பாகன் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>