என்னமா இப்படி பண்றீங்களே மா.. பிரபல நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை..

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும், சொல்வதெல்லாம் உண்மை என்ற பிரபல நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில், நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்நிகழ்ச்சி, பொது மக்களின் குடும்ப பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கான ஒரு மேடையாக நடத்தப்படுகிறது. இருப்பினும், இந்நிகழ்ச்சி பலரது கிண்டலுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ளது.

இந்நிலையில், விருதுநகரை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி தனிமனித உரிமையில் தலையிடுகிறது என்றும் அதனால், இந்நிகழ்ச்சியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு குறித்து விசாரித்த உயர் நீதிமன்றம், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனர் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>