மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் கட்டுமானப் பணிகளுக்கு உகந்தது அல்ல-தமிழக அரசு வாதம்

சென்னை: மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட மணல், கட்டுமானப் பணிகளுக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பு வாதிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஆர்.எம் ராமையா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் எனவும், புதிதாக மணல் குவாரிகள் திறக்கக் கூடாது எனவும் அதிரடியாய் உத்தரவைப் பிறப்பித்தது. இந்த உத்தரவு, மணல் மாபியாக்கள் முதல் அரசியல் பெரும்புள்ளிகள் வரை, பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது, இந்த சட்டம் அமலுக்கு வந்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது, இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், தமிழக அரசின் கனிமவளச் சட்டப்படி, மனுதாரர் இறக்குமதி செய்துள்ள மணல் தொழிலக பயன்பாட்டிற்கான மணல் (தாது மணல்) என்ற வரையறைக்குள் வருகிறது. ஆனால், அத்தகைய தாது மணல் இறக்குமதி செய்வதற்கான உரிமம், விற்பனைக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து அனுமதிச் சீட்டு ஆகியவற்றை உரிய அதிகாரிகளிடம் மனுதாரர் பெறவில்லை. அதனால்தான் மணலை வெளியே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தன்னை எதிர்மனுதாரராகச் சேர்க்கக்கோரி திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த மரிய ஆண்டனி மனு செய்தார். அதில், எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து 42 ஆயிரத்து 51 மெட்ரிக் டன் மணலை பெறுவதற்காக ரூ.8 கோடியே 20 லட்சத்தை கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி செலுத்தினேன்.  இந்நிலையில் இந்த வழக்கில் அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் என்னால் உரிய நேரத்தில் மணலைப் பெற முடியவில்லை. இதனால் எனக்கு தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இவரது மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணன் வாதிடுகையில், மணல்களில் பலவகை உள்ளது. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பயன்பாட்டிற்கு உரியது. மனுதாரர் இறக்குமதி செய்த மணல் கட்டுமானப் பணிகளுக்கானது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதில் சிலிக்கான் அளவு அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சிலிக்கான் அளவு கூடுதல் உள்ள மணலை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த முடியாது. எனவே அவை தொழிலகப் பயன்பாட்டுக்கான மணல் என்ற வரையறைக்குள் இடம்பெறும். தனி நீதிபதி தனது உத்தரவில், தமிழகம் முழுவதும் சோதனைச் சாவடி ஏற்படுத்தி வாகனங்களில் வரும் மணலை சோதனைச்சாவடி அதிகாரிகள் சோதனையிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது சாத்தியமில்லாதது. வாகனங்களில் வரும் மணல் கட்டுமானப் பணிகளுக்கானதா அல்லது தொழிலகப் பயன்பாட்டிற்கானதா என்று சோதனைச் சாவடிகளில் உள்ள அதிகாரிகளால் ஆய்வு செய்ய முடியாது.  எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை நாளை அதாவது டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
More News >>