அமைந்தது காவிரி மேலாண்மை வாரியம்! மத்திய அரசு உத்தரவு!

காவரி நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் வெகு நாட்களாக குழப்பம் நிலவி வந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துள்ளது மத்திய அரசு.

தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் காவிரி நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் கடந்த பல வருடங்களாக பிரச்னை நிலவி வந்தது. இதில் கர்நாடகா, காவிரி ஆற்றில் அணைகள் கட்டி, மற்ற மாநிலங்களுக்குத் தேவையான நீரை திறந்து விடாமல் வஞ்சித்து வந்தது.

இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், `மத்திய அரசு, நான்கு மாநிலங்களுக்கு மத்தியில் நிலவி வரும் நீர் பங்கீட்டுப் பிரச்னையைத் தீர்க்க உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன்னர் வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று கூறி காவிரி பங்கீடு தொடர்பான வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்த வாரியத்திற்கு ஒரு தலைவர், ஒரு செயலாளர் மற்றும் பல பகுதி நேர ஊழியர்களை மத்திய அரசு நியமிக்க உள்ளது. மாநிலங்களின் சார்பில், ஒரு பகுதி நேர ஊழியர் இந்த வாரியத்தில் நியமனம் செய்யப்படுவார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>