போராடும் மக்கள்.. சலித்துக்கொள்ளும் கட்சிகள் - நடிகர் ராஜேஷ் பளீர்!

மக்கள் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சலித்து கொள்வதாக நடிகர் ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வேப்பேரில் பொதுக்கூட்டம் நடந்தது. நடிகர் சத்யராஜ், மயில்சாமி, தமிழ் இலக்கிய படைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராஜேஷ், ‘கலைகளில் மிகவும் பிரதானமானது சினிமா’ என்ற விளாதிமிர் லெனின் மேற்கோளை சுட்டிக்காட்டினார். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் சினிமா மூலம் தான் புகழ் பெற்றனர் எனவும் குறிப்பிட்டார்.

புகழ் பெற்ற அனைத்து துறைகளிலும் திமுக தலைவர் கருணாநிதி சிறந்து விளங்கியதாக ராஜேஷ் புகழாரம் சூட்டினார். அனைத்து தலைவர்களின் நற்குணங்களை உள்வாங்கி செயல்பட்ட ஒப்பற்ற தலைவரும் கருணாநிதிதான் என அவர் பாராட்டினார்.

“1968ஆம் ஆண்டில் இருந்து தமிழக அரசியலை நான் உற்று நோக்கி வருகிறேன், மக்கள் இறங்கி போராடும் இந்த சூழலில் அரசியல் கட்சிகள் சலித்து கொள்கின்றன. இது தான் 50 ஆண்டுகளாக அரசியலில் ஏற்பட்ட மாற்றம்" என ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>