அமெரிக்காவில் ஆற்றில் விழுந்தவருக்கு உதவ முயன்ற இந்தியர் பலி

அமெரிக்கா, மிக்ஸிகனில் டெட்ராய்ட் நகரில் பிளாக் ரிவர் என்ற ஆறு உள்ளது. கடந்த புதன்கிழமை பிற்பகலில் இந்த ஆற்றில் மூழ்கி இருவர் பலியானார்கள். அவர்களுள் ஒருவர் எர்ணாகுளத்தை பூர்வீகமாக கொண்ட இந்தியர் என்பது தெரிய வந்துள்ளது. பிளாக் ரிவர் ஆற்றில் சிறுபடகு ஒன்று கவிழ்ந்தது. அதில் இருந்த ராபர்ட் ஜாண் லெவன்டோஸ்க்கி (வயது 47) என்பவர் ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக அருகில் சென்று கொண்டிருந்த படகில் இருந்த ஸ்மித் ஜேக்கப் அலெக்ஸ் (வயது 32) என்ற இளைஞர் ஆற்றுக்குள் குதித்துள்ளார். இருவரும் மிதப்பற்கான லைஃப் ஜாக்கெட் அணியாத நிலையில் ஆற்றினுள் மூழ்கியுள்ளனர். புதன்கிழமை அங்குள்ள நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில் செயின்ட் கிளேர் கவுண்ட்டி அவசர தகவல் மையத்திற்கு இந்த தகவல் கிடைத்துள்ளது. மீட்பு படையினர் முயற்சித்தும் இருவரையும் கண்டு பிடிக்க இயலவில்லை. அன்று இரவு கரையிலிருந்து 25 அடி தூரத்தில் 16 அடி ஆழத்தில் முதலாவதாக ராபர்ட்டின் உடலும், பிறகு ஸ்மித்தின் உடலும் மீட்கப்பட்டன. ஸ்மித் ஜேக்கப், கிளிண்டன் டவுண்ஷிப்பில் வசித்து வந்துள்ளார். அவருக்கு 9 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. மனைவி ஜானா ரேச்சல் மற்றும் மனைவியின் பெற்றோருடன் படகில் சென்று கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
More News >>