18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு தெரிவித்ததால், 3வது நீதிபதிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டதும், தினகரனின் ஆதரவாளர்களான எம்எல்ஏக்களான 18 பேரும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து, இந்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு எதிராக, பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணையில் சுமார் 1 மணியளவில், ஏழாவதாக 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் சபாநாயகர் ஆகியோர் ஒவ்வொருவராக வாசித்தனர்.

இதில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார். ஆனால், மற்றொரு நீதிபதியாக சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என உத்தரவிட்டுள்ளார். இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பும் மாறுபட்டு இருந்ததால், விரைவில் 3வது நீதிபதி நியமிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.

முன்னதாக, ஜெயலலிதாவி புகைப்படம் சட்டப்பேரவையில் வைத்தது, ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட வழக்குகளில், சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைத்தது வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

More News >>