தண்ணீர் தட்டுப்பாடால் இந்தியா தவிக்கும்!- அரசு ஆய்வு

இந்தியா தன் வரலாற்றிலேயே மிகப் பெரிய தண்ணீர் பிரச்னையை சந்தித்து வருவதாக நிதி அயோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் இந்த நிதி அயோக் அறிக்கையை நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்த அறிக்கையின் மேலும் அச்சப்படுத்தக் கூடிய விஷயம் என்னவென்றால், தண்ணீர் பிரச்னை இன்னும் மோசமடையப் போகிறது என்பது தான். தேசிய அளவில் ஏறக்குறைய 60 கோடி மக்கள், அதிகம் அல்லது மிக அதிகமான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனராம். ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் உயிரிழந்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. அறிக்கையில் மேலும், 'தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்னை இன்னும் இக்கட்டான கட்டத்தை எட்டப் போகிறது. ஏனென்றால் வரும் 2030 ஆம் ஆண்டு தற்சமயம் தேவைப்படும் நீரை விட இரண்டு மடங்கு அதிக நீர் தேவையாக இருக்கும். இதனால், பல லட்சம் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை நேரடியாக அனுபவிப்பனர். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் சுமார் 6 சதவிகிதம் வரை பாதிக்கும். வரும் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் 21 நகரங்களில் நிலத்தடி நீர் சுத்தமாக வறண்டுப் போகும். இதனால், 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவர்' என்று தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை தொடர்ந்து, 'நாட்டின் 70 சதவிகித நீர் அசுத்தமாக இருக்கிறது. 122 நாடுகளில் நீர் தரத்தை அளவிட்டதில் இந்தியா 122 வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. பலகட்ட நீர் மேலாண்மையை சரி வரச் செய்யும் மாநிலங்களையும் பட்டியலிட்டுள்ளதில், குஜதார் முதல் இடத்திலும் மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் முறையே 2 மற்றும் 3 வது இடத்திலும் இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல நீர் மேலாண்மையில் பின் தங்கியுள்ள மாநிலங்களில் உத்தர பிரதேசம், பிகார், ராஜஸ்தான் மாநிலங்கள் முறையே 1, 2 மற்றும் 3 வது இடங்களில் இருக்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளது.
More News >>