பிரபல பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி சுட்டுக்கொலை!

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் வெளி வரும் 'ரைசிங் காஷ்மீர்' செய்தித்தாளின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுஜாத் புகாரி, நேற்று ஸ்ரீநகரில் இருக்கும் தனது செய்தித்தாள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல மாலை 7:30 அளவில் வெளியே வந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து புகாரி மற்றும் அவரது பாதுகாப்புக்காக இருந்த காவலர்களையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் புகாரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தியாவின் முக்கியமான பத்திரிகையின் ஆசிரியரே இப்படி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு அவர் மீது நடந்த தாக்குதலை அடுத்து, அவருடன் பாதுகாப்புக்கு காவலர்கள் இருக்கும்படி செய்தது அரசு.

நேற்று அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தை ரைசிங் காஷ்மீர் அலுவலகத்தின் அருகிலிருந்த சிசிடிவி கேமரா ஒன்று பதிவு செய்ததில், கொலையாளிகள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் செல்வது தெரிந்தது.

இந்திய அளவில் இருக்கும் முக்கிய பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இந்த சம்பவத்துக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு எவ்வளவு கேள்விக்குறியான ஒரு இடத்தில் இருக்கிறது என்பதை இச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

அரசு, பத்திரிகையாளர்கள் யாருக்கும் அஞ்சாத வண்ணம் தங்களது கடமையைச் செய்ய உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்துள்ளனர்.

More News >>