நடிகை கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்!

நடிகை கஸ்தூரி வீட்டை, திருநங்கைகள் துடைப்பத்துடன் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வீனஸ்காலனியில் உள்ள நடிகை கஸ்தூரி வீட்டின் முன், திருநங்கைகள் துடைப்பத்துடன் குவிந்தனர். நடிகை கஸ்தூரிக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

பின்னர் பேசிய திருநங்கைகள், "சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தி டிவிட்டரில் கருத்து பதிவிட்ட கஸ்தூரியைக் கண்டிக்கிறோம். உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் உள்ள அந்த பதிவை கஸ்தூரி நீக்க வேண்டும்" என்றனர்.

"நடிகை கஸ்தூரி திருநங்கைகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பல அமைப்புகளைச் சேர்ந்த திருநங்கைகளை ஒன்று திரட்டி அனைத்து மாவட்டங்களிலும் கஸ்தூரிக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

More News >>