ஜெயலலிதா மரணம்... விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவர்

 

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் முன்பு அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் இன்று நேரில் ஆஜராகினார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஓய்வு பெற்ற மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா, சென்னை அரசு பொது மருத்துவமனை முதல்வர் நாராயண பாபு, திமுகவைச் சேர்ந்த சரவணன், அரசு மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜன், கலா, முத்துச்செல்வன், டீட்டோ மற்றும் தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்ட பத்து பேரிடம் இதுவரை இந்த ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பதினோராவது நபராக ஜெயலலிதாவுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளித்த மருத்துவர் சங்கர் இன்று காலை 10.30 மணிக்கு ஆணையம் முன்பு ஆஜரானார்.

விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பலமுறை அவருக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை அளித்ததாகவும், அப்போது அவருக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு ஸ்ட்டீராய்டு அதிகமாகக் கொடுக்கப்ட்டதால், அவருக்கு இந்தநிலை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவரைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விசாரணைக்காக ஆணையம் முன்பு நாளை ஆஜராகிறார். அவரைத் தொடர்ந்து பலரிடமும் விசாரணை நடைபெற உள்ளது.

More News >>