கமல், விஷாலை தொடர்ந்து ஆப் ஆரம்பித்த சரத்குமார்

கமல்ஹாசன் சமீபத்தில், 'மய்யம்' எனும் மக்களுக்கு உதவும் செயலியை அறிமுகப்படுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றார். நடிகர் விஷால் ‘வி ஷேல்’ எனும் செயலியை அறிமுகப்படுத்தினார். இவர்களைத் தொடர்ந்து தற்போது சரத்குமாரும் ‘ஆஸ்க்’ செயலியைத் தொடங்கியிருக்கிறார். 'ஆஸ்க்' என்ற பெயரில் சரத்குமார் தொடங்கியிருக்கும் இந்த செயலியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் பயன்பாட்டில் இருக்கும். உங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து உள் நுழையலாம்

நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த துவக்க விழாவில், அவரது மனைவி ராதிகா சரத்குமார், இந்திய முன்னாள் நிதித் துறை செயலாளர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செயலியை அறிமுகப்படுத்தி, புதிதாகத் தொடங்கப்பட்ட 'ஆஸ்க்' செயலி குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.

ஒரு திரைப்பட நடிகராக, பத்திரிக்கைத் துறை சார்ந்தவராக ஒரு அரசியல் இயக்கத்தை நடத்தி வரும் தலைவராக இருக்கும் நான் ஒரு செயலியின் மூலமாக அனைத்து தரப்பு மக்களோடும் நேரிடையாக தொடர்பு கொள்ளவும், கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், ஒரு இணைப்பு பாலமாக செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

என்னோடு பொதுமக்கள் தகவல் பரிமாற்றங்களை நேரிடையாகப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்குமாறு இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளை விரைவில் தீர்த்து வைக்கப்படும் களமாகவும் சமூக சீர்திருத்தத்திற்கான தளமாகவும் இது இருக்கும்.

பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய உற்ற தோழனாகவும் இந்தச் செயலியின் செயல்பாடு அமைய உள்ளது. பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்னென்ன, அவை எந்தெந்த வழிகளில் தீர்வு காணப்பட்டன, எத்தகைய அணுகுமுறை உபயோகப்படுத்தப்பட்டது போன்ற பல்வேறு விவரங்கள் இச்செயலியில் அடங்கி இருக்கும்" எனக் கூறினார்.

More News >>