எடப்பாடிக்கு திராணி இருந்தால் செய்து பார்க்கட்டும் - தங்க தமிழ்ச்செல்வன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திராணியிருந்தால், 18 எம் எல் ஏக்களுள் ஒருவரையாவது இழுத்து பார்க்கட்டும் என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் சவால் விடுத்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தால், 3-வது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 3-வது நீதிபதியாக விமலாவை நியமித்து மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் இதுதொடர்பான நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, 18 எம்எல்ஏக்களும் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திராணி இருந்தால் 18 எம்.எல்.ஏக்களில் ஒருவரையாவது இழுத்து பார்க்கப்பட்டும். அப்படி இழுத்தால், மீதமுள்ள எம்.எல்.ஏக்களும் அவர்கள் பின் செல்வோம்" என்றார் .

மேலும், "தினகரனுக்கும், தமக்கும் எந்தவித கருத்துவேறுபாடுயின்றி ஒற்றுமையுடன் இருக்கிறோம். அவதூறுகளை பரப்ப வேண்டாம். நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்ததால் மட்டுமே வழக்கை வாபஸ் பெறப்போகிறேன்" என்று தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

More News >>