எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு செய்தி பரப்பிய எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பெண் பத்தரிக்கையாளர் குறித்து எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்த விவகாரம் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எஸ்.வி.சேகரின் கருத்துக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், எஸ்.வி.சேகருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எஸ்.வி.சேகர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார். இதனால், எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் என்று கெடு விதித்து நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.இந்நிலையில், எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை. இதனால், முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், எஸ்.வி.சேகர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.

இதன் பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த எஸ்.வி.சேகர் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து ஜாமீன் வழங்கி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

More News >>