நிலம் அளக்க எதிர்ப்பு... தற்கொலைக்கு முயன்ற விவசாயிகள்!

தர்மபுரி அருகே பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 3 குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை அளந்து மதிப்பீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் அதிக அளவிலான நிலத்தை கையகப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பாப்பிரெட்டிபட்டி கிராமத்திற்கு வந்த அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளக்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது, 3 குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

இதனால், அங்கிருந்து புறப்பட்ட அதிகாரிகள், வேறு இடத்தில் நிலம் அளக்கும் பணியை மேற்கொண்டனர். அங்கும் எதிர்ப்பு கிளம்பியதால், நில அளவீடு செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

More News >>